Wednesday, February 16, 2011

BLACK RIVER - அத்தியாயம் நான்கு


அத்தியாயம் நான்கு

”சார் இரண்டாவதா எடுத்த பெட்டியில் இருந்த இரண்டு படங்களில், ஒன்னு ஒரு சந்தோஷமான குழந்தை படம், இன்னொன்னு ஒரு கோழி தன்னோட குஞ்சை பாதுகாப்பா அணைச்சுக்குற மாதிரியான படம்!”

“அது மட்டுமில்லாம அதுகளுக்கு பின்னாடி A, A அப்படிங்கிற எழுத்துக்கள்தான் இருந்தது.”

“சார் அது என்ன வார்த்தையா இருக்கும்?”

“சார் அந்த படங்கள் எதை சொல்லுது?”

பாபுவும் செல்வாவும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மங்குனி ஏதோ யோசனையிலிருந்தார்.

“சார் நாங்க கேட்டுகிட்டே இருக்கோம் நீங்க அமைதியா இருக்கீங்க?”

“இதோ பாருங்க, எல்லா பெட்டிகளும் கிடைக்கிற வரைக்கும் நம்மால எதையும் கண்டு பிடிக்க முடியாது. அதனால மீதி இருக்கிற 2 பெட்டிகளை முதல்ல எடுப்போம் அப்புறம் இதையெல்லாம் யோசிப்போம். இப்போ நாம அடுத்த பெட்டி இருக்கிற இடத்துக்கு போவோம்.”

“சார் அடுத்த பெட்டி எங்கே இருக்கும்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?”

“ஆமா 2who have male and female living here - இது சிவனை குறிக்கிறது நாமை இங்கே இருக்கிற அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு போகணும்”

Monday, February 14, 2011

BLACK RIVER - அத்தியாயம் மூன்று

தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!


அத்தியாயம் - 3

ராம் ஒரு உற்சாகத்துடன் ஏஞ்சலினா வீட்டை அடைந்தான். அவள் அவனுக்காகவே புன்னகை ஏந்தி காத்திருந்தாள். ராம் நாம் அங்கே போய்டுவோம் என அவள் மாமா கட்டியிருந்த அந்த தனி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.


அவள் வெகுநேரம் மவுனமாக நடந்தாள். பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். கதவு தானா பூட்டிக் கொண்டது. ராம் பயந்தான். ஏஞ்சலினா தன்னிடம் ஒரு சாவி இருப்பதாகவும் அதனால் போகும்போது திறந்து கொள்ளலாம் என சொன்னாள். ராம் சந்தோசம், பயம் இவை கலந்த மனநிலையில் இருந்தான்.

“ராம் ”

”என்ன ஏஞ்சலினா”
“இந்த வீடு எனக்கு சந்தோசம் துக்கம் இரண்டையும் கொடுத்த வீடு!”


“என்ன சொல்ற”

“ஆமாம் ராம் என் சின்ன வயசிலேயே என் அம்மா அப்பா இறந்துட்டாங்க. என் மாமா என் அம்மா கூடப் பிறந்தவர். திருமணமே செஞ்சுக்கலை. என்னை வளர்த்தார்”
“அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டானவர். பிஎஸ்வின்னு சொன்னா எல்லோரும் நடுங்குற அளவுக்கு பயங்கரமான போலீஸா இருந்தவர். அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா செக்யூரிடி நிறுவனம் தொடங்கினார். எதுக்குன்னு தெரியலை.”

“பெரும்பாலும் எனக்கு எல்லாமே செஞ்சார். ஆனா ரொம்ப கட்டுப்பாடு அதிகம். எல்லாம் என் மேலே இருக்கிற அன்பினால செய்யறார்னு நினைச்சேன் ஆனா அது என் பேர்ல இருக்கிற சொத்துக்காகத்தான்னு பின்னாடி புரிஞ்சது. இன்னும் இரண்டு நாளில் என் பிறந்தநாள் வரப்போகுது. அப்ப எனக்கு 21 வயசு. எனக்கு 21 வயது முடிஞ்சவுடன் என் சொத்தை யாருக்கு வேணா எழுதலாம்கிறது என் அப்பா எழுதி வச்ச உயில் அதை அவரு பேருக்கு மாற்றும் வரைக்கும்தான் நான் நல்லா இருக்க முடியும்....”

சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் ஏஞ்சலினா.

Saturday, February 12, 2011

BLACK RIVER - அத்தியாயம் இரண்டு

பாகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்குன்னு நினைக்காதீங்க சின்னதா போட்டா சுவாரசியமா இருக்காது. மேலும் கதையும் நகராது. அதான். மன்னித்துக் கொள்ளுங்கள்!


அத்தியாயம் இரண்டு


மொரிஷியஸ்.

மங்குனி, செல்வா, பாபு மூவரும் உட்கார்ந்திருந்தனர்.

”எப்படி சார் இங்கே புதையல் இருக்குன்னு கன்ஃபார்மா சொல்றீங்க?”

”சொல்றேன் அதுக்கு முன்னால் நாம மூணு பேரும் 2 வருஷத்துக்கு முன்னால் இந்த மொரிஷியசில் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம் நினைவிருக்கா?”

“ஆமாம் சார் பழங்கால கடற்கொள்ளையர்களின் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி அது.”

“அதில் ஒரு முக்கியமான ஆனால் நீங்கள் நம்பாத விஷயம் ஞாபகம் இருக்கா?”

“ம்... இருக்கு சார்! கடற்கொள்ளையர்கள் பற்றி ஆராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளின்படி சுமார் கிபி 1750ஆம் வாக்கில் கேங்குலா நாட்டை சேர்ந்த ஒரு கப்பலை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அக்கப்பலில் கேங்குலா நாடு மிகவும் போற்றும், மதிப்பு மிக்க சில பொருட்கள் இருந்துள்ளன. அதை காப்பாற்ற அந்த நாட்டு வீரர்கள் போராடினர் அந்த மதிப்பு மிக்க பொருட்கள் அதாவது புதையலை எங்கேயோ பதுக்கி விட்டு அதன் குறிப்பை கொண்டு செல்ல முயற்சித்து அவர்கள் தோற்றுவிட்டார்கள். ”

“ஆமாம் சரிதான் ஆனால் அந்த புதையல் இன்னும் இங்கேதான் உள்ளது என நான் சொன்னதை நீங்க இரண்டு பேரும் நம்பலை.”

“ஆமாம் சார் ஒண்ணு அந்த குறிப்பு கொள்ளையர்கள் கிட்ட கிடைச்சிருக்கணும், இல்லை கேங்குலா நாட்டை சேர்ந்தவங்க கிட்டேயே கிடைச்சிருக்கணும். எப்படியிருந்தாலும் புதையல் இங்க இருக்காது சார்!”

மங்குனி புன்னகைத்தார். “அப்படி கிடைச்சிருந்த அந்த குறிப்புகள் எனக்கு எப்படி கிடைக்கும்?”

Thursday, February 10, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஒன்று

 நண்பர்களே சினிமாட்டிக்காக ஒரு சிறு திரில்லர் கதை முயற்சி. ஏழு பாகம் கொண்ட கதை. சில நம்ப முடியாத விஷயங்கள் வரலாம். லாஜிக் பார்க்காம படிங்க! நம் வலைப்பூ நண்பர்களின் பெயர்களையே கதாபாத்திரங்களுக்கு வைத்துள்ளேன். படித்து கருத்து கூறுங்கள்! நன்றி!

முன் கதை:

கிபி 1758. இந்தியப் பெருங்கடல்.
அந்த நடுக்கடலில் ஒரு கப்பல் அபாயகரமான சப்தங்களுடன் வீற்றிருந்தது. ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த கப்பலில் மரண ஓலமும் வாள் வீச்சின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. கேங்குலா நாட்டை சேர்ந்த அக்கப்பலை கடல் கொள்ளையர்கள் முற்றுகையிட்டிருந்தனர். கொள்ளையர்களிடையே ஒரு சிறு சலசலப்பு. அவர்கள் தேடிவந்த முக்கியமான பெட்டியை காணவில்லை! ஒரு கொள்ளையன் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு படகை கண்டான்.....

----------------------------

படகு அத்தீவை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய அவ்வீரனின் நெஞ்சில் கேங்குலா நாட்டு ராஜமுத்திரை இருந்தது. அவன் சிறிது யோசனை செய்தான். பிறகு வேகமாக பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
----------------------------
இன்னொரு படகும் அத்தீவை அடைந்தது அதிலிருந்து சில கொள்ளையர்கள் இறங்கினர்.

”அந்த வீரன் இங்கே தானே  வந்தான்?” “ஆம் தலைவா” “தேடுங்கள் அவனை விடாதீர்கள். அவன் கையில் இருக்கும் பெட்டி என்னிடம் வர வேண்டும்!”

கொள்ளையர்கள் அவ்வீரனை தேடி தீவில் ஓடினர்.
----------------------------

தீவின் மற்றொரு பக்கம் கேங்குலா நாட்டை சேர்ந்த வேறு சில வீரர்களும் வந்திறங்கினர்.

”இளவரசர் இங்கேதானே வந்தார்” ”ஆமாம்” “ஜாக்கிரதை கொள்ளையர் கூட்டமும் இங்கு வந்துள்ளது அவர்கள் கையில் இளவரசர் சிக்கும் முன் நாம் அவரை காப்பாற்றியாக வேண்டும்.”

----------------------------

”இளவரசே, தாங்கள் இங்கிருக்கீறீர்களா”

“வீரனே நம் நாட்டின் பொக்கிஷத்தை நம்பிக்கை மிகுந்த நபரிடம் ஒப்படைத்துள்ளேன் . அவ்விடம் பற்றிய குறிப்புகள் என்னிடம் உள்ளன. இதை அரசரிடம் சேர்த்து விடு. நிறங்கள் என்பதை நினைவில் வைக்கச் சொல். என்னைப் பற்றிக் கவலைப்படாதே! செல் சீக்கிரம் செல்”

கொள்ளை கூட்டம் இளவரசை கண்டு ஓடி வந்தது. வீரன் அவனிடமிருந்து ஓடினான். திரும்பி பார்த்தான் அங்கே இளவரசர் அக்கொள்ளையர்களால் வெட்டப்படுவது தெரிந்தது. கண்களில் கண்ணீருடன் அந்த மலைத் தொடரை நோக்கி தன் சகாக்களை நோக்கி அவன் ஓடினான்.

அப்போது ஒரு கொள்ளையன் விட்ட அம்பு அந்த வீரனை துளைத்தது. அவன் கையில் இருந்த அந்த குறிப்புகள் மலையின் மறுபக்கம் விழுந்து இருளில் மறைந்தது.

அவனை நோக்கி ஓடி வந்த சகாக்களிடம் “நிறங்கள்” என்ற ஒற்றை வார்த்தையை கூறி விட்டு இறந்து போனான் அவன்.


------------------------------------------------------------------------------------------------------------------


அத்தியாயம் ஒன்று

Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறேன்............!

அத்தியாயம்  ஒன்று


கிபி. 1979. ஆகஸ்ட் 27.


அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.


அரச குடும்பத்தில்தான் பிறந்தேன் நான். பல போர்களில் பங்கு கொண்டு நாட்டிற்காக போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன். பல பெருமை பெற்றேன். இதோ இப்போது எனக்கு 79 வயது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். பேரன் பேத்திகள் என வாழ்க்கையும் விரிவடைந்து மகிழ்ச்சியாக உள்ளது.


வெளியே நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும் உள்ளுக்குள் இத்தனை காலம் வாழ்ந்ததற்கான திருப்தி இல்லை. ஏன்????


என் எதிரே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் முகத்தோற்றத்திலிருந்து அவர்கள் இந்தியர்கள் என புரிந்துகொண்டேன். இந்தியா! எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று! இந்தியாவுடனான என் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.


கிபி. 1947. இந்தியா.


கிளமண்ட் அட்லி என்னை இந்தியாவின் வைஸ்ராயாக நியமித்தார். 1948க்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு நான் குடும்பத்துடன் குடியேறினேன். அந்த நாட்டின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கையாண்ட அஹிம்சா முறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.


1947ல் போராட்டங்கள் அதிகமான காரணத்தால் மற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி நான் சுதந்திரம் வழங்க முடிவெடுத்தேன். சில ஆட்சியாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்க வேண்டாம் என்றார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரிவினை வேண்டும் என்றார்கள். சில இந்திய தலைவர்களும் ஒப்புக்கொள்ள 1947, ஆகஸ்டு 15 இரவு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த பிரிவினையை என் உள்மனம் தவறென சொன்னபோதும், என் வெளிமனம் சந்தோசப்பட்டது அப்போது. அதற்கு பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையோடு வெளிவந்தேன்.

மீண்டும் கிபி. 1979. ஆகஸ்ட் 27.

நினைவலைகளிலிருந்து வெளிவந்தேன். அந்த இந்திய சம்பவங்களுக்கு பின்னும் எத்தனையோ போர்கள், ஆட்சிகள், ஆக்கிரமிப்புகள்…. வாழ்க்கையில் அதனால் எத்தனையோ வெற்றிகளை நானும் என் நாடும் சம்பாதித்திருந்தது. அந்த போர்களினால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருந்தபோதும் எத்தனையோ பேரின் கண்ணீர் இருந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இதனால் எத்தனை ஆபத்துக்களும் வந்து கொண்டுதான் உள்ளது. இதோ இந்த அயர்லாந்து பகுதிக்கு வருவதுக் கூட ஆபத்தான ஒன்றுதான் என எச்சரித்த போதும் மன அமைதிக்காக வருடந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

என் எதிரே இருந்த அந்த சிறுவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒரு இந்தியச் சிறுவன் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டார்கள். நான் என் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்டேன். அவர் கூறினார்.

“ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள்? வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழி உள்ளது. சண்டை மற்றும் அமைதி. சண்டையினால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானது மேலும் பல இழப்புகளும் துன்பங்களும் ஏற்படும். ஆனால் அமைதியால் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானது. இழப்புகள் குறைவானது. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு விரலின் பலத்தை விட ஐந்து விரல்கள் சேரும்போது அதிக வலிமை கிடைக்கும்!”

இந்த சிறிய வயதில் அவனின் முதிர்ச்சியை கண்டு வியந்தேன். என் மனம் அமைதியில்லாமல் இருப்பதற்கு காரணம் நான் செய்த சண்டைகள். அதன் நினைவுகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்வில் மீண்டும் பிறந்தால் நான் ஆட்சி செய்த ஆக்கிரமித்த நாடுகளுக்குள் ஒன்றி பிறந்து அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். என் மனதில் உறுதியாக எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்……

”டமால்!”

கிபி. 1979. ஆகஸ்ட் 28.

முக்கியச் செய்தி: ”மௌண்ட் பேட்டன் பிரபு அயர்லாந்து நாட்டின் முல்லாஹ்மோர் பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது அயர்லாந்து ராணுவப்படை வைத்த வெடிகுண்டு வெடித்து காலமானார் அவருடன் படகில் சென்ற அரச குடும்பத்தினர் உட்பட………”


அத்தியாயம் இரண்டு


கிபி. 2011. ஜனவரி 7.

மாலை நேரம். அந்த அறைக்குள் நுழைந்தேன். அந்த அறையின் அமானுஷ்யம் என்னை பயமுறுத்தியது. மனதிற்குள் கலக்கம் வந்தபோது வேலை நிறைவேண்டியிருந்ததால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சென்றேன். எதிரே அவர் அமர்ந்திருந்தார்.

“வணக்கம் சார்”

அவர் அமைதியாக புன்னகைத்தார். உட்காரச் சொன்னார்.

“உங்களுக்குத்தான் உங்க பூர்வ ஜென்மத்தை பற்றி தெரிஞ்சிக்கனுமா?”

“ஆமா சார். எப்படி சார் அதை பண்ணுவீங்க? எதாவது ஆவியை கூப்பிடுவீங்களா?”

அவர் மீண்டும் புன்னகைத்தார்.

“இல்லை. உங்கள் வெளிமனதை நன்றாக உறங்க செய்து ஆழ்மனதை தட்டி எழுப்புவோம். ஆழ்மனதில் படிந்துள்ள பூர்வஜென்ம ஞாபகங்கள், மறக்காத நினைவுகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.”

அவர் பதில் சொல்லிவிட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பில் என்னை படுக்கச் சொன்னார். பின்னர் ஏதோ பயிற்கள் செய்தார். எனக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் எங்கோ இருப்பது போன்ற உணர்வு. பிறகு திடீரென பல நினைவுகள் தோன்றின….

“அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்…………”

*************************


கண் விழித்தேன். வேறொரு உலகத்திலிருந்து வந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. போன ஜென்மத்தில் நான் மவுண்ட்பேட்டன் பிரபுவா?? என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு தெளிவிற்கு வந்தேன். போன ஜென்மத்தின் இறுதியில் எடுத்த முடிவின்படி அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட வேண்டுமென்று.

அங்கிருந்து கிளம்பும்போது அந்த பயிற்சியாளர் கேட்டார்.

“எதற்காக நீங்கள் பூர்வஜென்மத்தை தெரிந்து விரும்பினீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?”

“அது ஒன்றுமில்லை சார். என் வலையுலக நண்பர் அருண்பிரசாத் என்பவர் கடந்தகால நினைவுகளை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதச் சொன்னார் அதற்காகத்தான்”

- முற்றும் -

---------------------

பின்குறிப்பு 1:


சென்ற 2010 ஆரம்ப மாதங்கள் என் வேலைகள் சுறுசுறுப்பான காலகட்டம் அது. இருந்தபோதும் என் மனம் அமைதியின்றிதான் இருந்தது. மனதில் விரக்தியும் கவலைகளும் குடிகொண்டிருந்தன. மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டது. அப்போதுதான் வலைப்பூக்களில் மனதை திருப்பினேன். சிறிது நாட்களிலேயே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது. இப்படி வலையுலகம் மூலம் நான் பெற்ற நண்பர்கள் பலர்.

ஹாலிவுட் பாலா, கீதப்பிரியன், ஜோதிஜி, கருந்தேள், நாஞ்சில் பிரதாப், கொழந்த, சு.மோகன், டெனிம், RNS, Phantom mohan, காகி, கனவுகளின் காதலன், இலுமினாட்டி, இராமசாமி கண்ணன், மரா என ஆரம்பகாலத்தில் வலைப்பூக்களில் கிடைத்த நண்பர்கள் இவர்கள்.

பின்னர் ஒரு கும்பலாக கும்மியடித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர எனக்கு மிகவும் ஆசையாகவும் தயக்கமாகவும் இருந்தது. எப்படியோ சேர்ந்து இன்று இவர்களுடன் நித்தம் பொழுது சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள்: அருண், தேவா, பாபு, டெரர், ரமேஷ், ராம்சாமி, வெங்கட், மங்குனி, பட்டாபட்டி, சௌந்தர், செல்வா, ஜெயந்த், பிரசாத், மாதவன், பிஎஸ்வி, தில்லுமுல்லு, நாகராஜசோழன், சமீர், வினோ

என பெரிய பட்டாளமே உள்ளது. இன்னும் பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, ஆர்கேசதிஷ், சிபி, ஜில்தண்ணி, குத்தாலத்தான் என நிறைய பேர். சுபத்ரா, கௌசல்யா போன்ற சகோதரிகளையும் இந்த வலைப்பூ உலகத்தில் பெற்றுள்ளேன்.


இது தவிர இன்னும் ஏராளமான பேர் என் நண்பர்கள் என சொல்ல முடியும். பலரின் பேரை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர்கள் என்னை நண்பர்களாக நினைக்கிறார்களா என்ற தயக்கமே. ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________


எல்லோருடனும் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. அது என் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.



பின்குறிப்பு 2:



இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்...................................